ராஜ்காட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை கோமாளித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி உடன் விளையாடுகிறது.
இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இது சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி,ரோகித் சர்மா பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இணை எடுத்த முடிவு ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. தொடக்க வீரராக இசான் கிஷன் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணியில் இல்லை. இதனால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்குவார் என பேட்டிங் வரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் இடம் அணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதனால் பேட்டிங் வரிசை மாறப்போகிறது. இஷான் கிசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கோலியும், ரோகித்தும் தொடக்க வீரராக களம் இறங்கினால் நடு வரிசையில் ராகுல், ஸ்ரேயாஸ், சூரியகுமார் யாதவ் ஆகிய மூன்று வீரர்கள் தான் இருப்பார்கள்.
இதே போன்று கீழ் வரிசையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மட்டும் தான் விளையாடுவார்கள். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெறும் ஐந்து பேட்ஸ்மேன்களை வைத்து விளையாடுகிறது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ஆல்ரவுண்டர்களும் நான்கு பந்துவீச்சாளர்களும் அணியில் இருக்கிறார்கள். இது நிச்சயம் சரியான அணி கிடையாது என்றும், இதனால் இந்திய அணி தோல்வியை தழுவ வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.