டெல்லி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் ரேடியோ உரிமையை பெற்றுள்ள ஆல் இந்தியா ரேடியோ அனைத்து போட்டிகளின் வர்ணனையையும் நேரடியாக மேற்கொள்ளவுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் வர்ணனையை மேற்கொள்ள ஆல் இந்தியா ரேடியோ முயற்சி செய்தது. அதற்கு அனுமதி பெறமுடியாத நிலையில் தற்போது ஆஸ்திரேலிய தொடரின் ரேடியோ உரிமையை வாங்கியுள்ளது.
இந்திய -ஆஸ்திரேலிய தொடர் வரும் வெள்ளிக்கிழமை ஒருநாள் போட்டித் தொடரின் மூலம் துவங்கவுள்ளது. இதையடுத்து அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரின் ரேடியோ உரிமையை ஆல் இந்தியா ரேடியோ வாங்கியுள்ளதாக பிரசார் பாரதி சிஇஓ ஷஷி சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமையை தூர்தர்ஷன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டின் பல பகுதிகளில் 100 சதவிகிதம் சென்றடைந்துள்ள ஆல் இந்தியா ரேடியோ, கடந்த ஐபிஎல்லின் ரேடியோ உரிமைக்காக முயற்சி செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் நிறைவேறாத நிலையில் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் வர்ணனை உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.