டிசம்பர் 3ல் துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி பிரிஸ்பேனில் துவங்கி அடிலெய்டு, மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடத்தப்பட்டு ஜனவரி 3ம் தேதி இந்த தொடர் நிறைவுபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடிலெய்டில் பகலிரவு போட்டி
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய பகலிரவு போட்டியில் விளையாடி தனது முதல் பிங்க் பால் போட்டியை இந்தியா துவக்கி வைத்தது. அப்போது, ஆஸ்திரேலியாவில் பகலிரவு போட்டி நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அடிலெய்டில் இந்த பகலிரவு போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆஸி.யை வெற்றிகொண்ட முதல் ஆசிய நாடு
கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, அந்த தொடரை வெற்றி கொண்டு, அந்த நாட்டில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட முதல் ஆசிய நாடு என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில், தற்போது இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரின்போது கொரோனா தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொடரின் 3வது மற்றும் 4வது போட்டிகள் பாக்சிங் டே மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.