சென்னை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை தங்களது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான ஆடுகளம் எவ்வாறு இருக்கும். தற்போது உலகக் கோப்பையில் நடைபெறுவது போல் 300 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் வெற்றி கிடைக்குமா என்பதை தற்போது பார்க்கலாம்.

கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதின. இதில் ஆஸ்திரேலியா 269 ரன்கள் எடுக்க அதனை எட்ட முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. அதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா 287 ரன்கள் அடிக்க இரண்டாவது பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 291 குவித்தது.
2017 ஆம் ஆண்டு இந்திய அணி 281 ரன்கள் சேர்க்க மழை குறுக்கீட்டு ஆட்டம் 21 ஓவராக குறைக்கப்பட ஆஸ்திரேலியா அணி 137 ரன்கள் மட்டுமே 21 ஒவரில்எடுத்து தோல்வியை தழுவியது.2015 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 299 ரன்கள் சேர்க்க இரண்டாவதாக களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 264 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

இதனைப் பார்க்கும்போது சேப்பாக்கம் மைதானத்தில் 300 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பது முக்கியமே கிடையாது. நாளைய ஆட்டத்தில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வது நல்லது. ஏனெனில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் தோய்வடைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஆடுகளத்திற்கு கருப்பு நிற மண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக நாளை ஆடுகளம் இருக்கும். இதனால் இந்திய அணி மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால் மற்ற மைதானங்களில் நடைபெறுவது போல் 400 ரன் அடிக்கிறேன் என்று 150 ரன்கள் சுருண்டு விடாமல், பொறுமையாக டெஸ்ட் இன்னிங்சில் விளையாடுவது போல் ஆடி பிறகு அதிரடியாக விளையாடி 280 ரன்கள் குவித்தாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும்.