டாக்கா: இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே பற்றி எரியும் மோதல், இப்போது எல்லை தாண்டி வீரர்களின் தனிப்பட்ட வருமானத்திலும் கைவைக்கத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியா வர மறுக்கும் வங்கதேசத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விளையாட்டு உபகரண நிறுவனங்கள் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளன.
கிரிக்கெட் பேட் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இந்திய நிறுவனமான 'எஸ்ஜி' (Sanspareils Greenlands), பல வங்கதேச வீரர்களுக்கு ஸ்பான்சராக இருந்து வருகிறது. தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கதேச வீரர்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய அல்லது புதுப்பிக்காமல் இருக்க எஸ்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நிறுவனங்களின் இந்த முடிவால் வங்கதேசத்தின் முன்னணி வீரர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த ஒரு நிறுவனத்தால் மட்டுமே முன்னணி வீரர்களான லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், யாசிர் அலி ஆகியோர் பாதிக்கப்பட உள்ளனர்.
"ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று ஏஜெண்டுகள் மூலம் எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது" என்று பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். எஸ்ஜி-யைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த எஸ்எஸ் (SS) நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுத்தால், முஷ்பிகுர் ரஹீம் போன்ற மூத்த வீரர்களும் பாதிக்கப்படுவர்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் உறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதே இதற்குக் காரணம். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையை சுட்டிக் காட்டி இந்தியாவில் சில அமைப்புகள் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் ஆடக் கூடாது என போர்க்கொடி தூக்கின. இதை அடுத்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்குப் பதிலடியாக வங்கதேச அரசு ஐபிஎல் ஒளிபரப்பைத் தடை செய்தது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வர வங்கதேசம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.
தங்கள் நாட்டு வீரர்கள் பொருளாதார ரீதியாகத் தாக்கப்படும் இந்தச் சூழலில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. "இது வீரர்கள் மற்றும் ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட விஷயம். இதில் நாங்கள் தலையிட முடியாது" என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் நழுவியிருப்பது வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.