மெல்போர்ன்: இந்தியா-வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுமே ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலைத்தான் தேசிய கீதமாக வைத்துள்ளன.

இந்தியா மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இன்று உலக கோப்பை காலிறுதியில் மோதிய நிலையில், வழக்கம்போல, போட்டி தொடங்கும் முன்பாக, இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த தேசிய கீதத்தை கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் விளங்கியிருக்கும். இரண்டும் ஒரே மொழியில் உள்ளதே என்பதுதான் அந்த விஷயம். ஆம்.. இரு நாட்டு தேசிய கீதங்களுமே, வங்காள மொழியில் எழுதப்பட்டவைதான். எழுதியது, ரவீந்திரநாத் தாகூர்.
இந்தியாவின் தேசிய கீதம், ஜன கண மன என தொடங்குவதை போல, வங்கதேசத்து தேசிய கீதம், அமர் சோனார் பங்களா என்று தொடங்குகிறது. இதற்கு அர்த்தம், எனது தங்கமான வங்காளமே என்பதுதான்.
1905ல் இப்பாடல் எழுதப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பு, கிழக்கு வங்காளத்தில் (தற்போதைய வங்கதேசம்) முஸ்லிம்கள் அதிகமாகவும், மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அதிகமாகவும் வாழ்ந்தனர்.
இருவரும் ஒற்றுமையாக இருப்பது பிரிட்டீஷாரின் ஏகாதிபத்தியத்துக்கு ஆபத்தாக முடியும் என்பதால், வெள்ளையரான, கர்சன் பிரபு, கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என இரு பிரிவுகளாக நிலக்கூறுகளை பிரித்தார். ஆனால், வங்கமொழியிலான இந்த கீதம், இரு நிலப்பிரிவினரையும், இரு வேறு மதத்தை பின்பற்றுபவர்களையும் இணைக்க பயன்பட்டது.