டாக்கா: "எங்கள் நாட்டின் சுயமரியாதையையும், கௌரவத்தையும் அடகு வைத்துவிட்டு, உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று வங்கதேச அரசின் விளையாட்டுத்துறை ஆலோசகர் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் காட்டி டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்து வரும் நிலையில், அந்த நாட்டின் நிலைப்பாடு தற்போது இன்னும் உறுதியாகியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் மற்றும் துணைத் தலைவர் பரூக் அகமது ஆகியோருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு, வங்கதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எங்களுக்கு அனுப்பிய கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். இந்தியாவில் வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலின் தீவிரத்தை ஐசிசி இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
எங்களைப் பொறுத்தவரை இது வெறும் வீரர்களின் பாதுகாப்புச் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இது ஒரு நாட்டின் 'தேசிய அவமானம்' சம்பந்தப்பட்ட விஷயமாகவும் மாறிவிட்டது."
"இந்திய கிரிக்கெட் வாரியமே (BCCI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 'முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது, அவரை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்' என்று கூறுகிறது. ஒரு தனிப்பட்ட வீரருக்கே அங்குப் பாதுகாப்பு இல்லை என்று இந்திய வாரியம் ஒப்புக்கொள்ளும்போது, ஒரு முழு அணியும் அங்குச் சென்று விளையாடுவது எப்படிப் பாதுகாப்பானதாக இருக்கும்? இந்தியாவில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி."
"நாங்கள் கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் நாடு. உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம். ஆனால், அது எங்கள் நாட்டின் கௌரவத்தை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலோ இருக்கக்கூடாது.
டி20 உலகக் கோப்பையை நடத்தும் மற்றொரு நாடு இலங்கை. எனவே, எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்த விஷயத்தில் நாங்கள் எந்தச் சமரசமும் செய்துகொள்ளத் தயாராக இல்லை," என்று ஆசிப் நஸ்ருல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ மற்றும் ஐசிசி-யின் அழுத்தங்களுக்குப் பணியாமல், வங்கதேசம் எடுத்துள்ள இந்தத் தீர்க்கமான முடிவு, உலகக் கோப்பை அட்டவணையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.