இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், "வங்கதேசத்தின் போட்டிகளை வேண்டுமானால் நாங்கள் நடத்துகிறோம்" என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஐசிசியிடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பையை நடத்தவுள்ளன. ஆனால், சமீபத்திய இந்திய - வங்கதேச உறவில் ஏற்பட்ட பிளவு மற்றும் கிரிக்கெட் ரீதியான மோதல்களால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தங்கள் போட்டிகளை பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணமாக ஐபிஎல் 2026 விவகாரம் பார்க்கப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம் பெற்றிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திடம் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கூறியுள்ளோம். அவருக்குப் மாற்று வீரரைத் தேர்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளோம்" என்று கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், பதிலடி கொடுக்கும் விதமாக உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டோம் என அறிவித்தது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான இந்த விரிசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. "இலங்கையில் போட்டிகளை நடத்த மைதானங்கள் கிடைக்காத பட்சத்தில், வங்கதேசம் விளையாடும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மோஷின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, "பாகிஸ்தான் ஏற்கனவே 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மகளிர் தகுதிச் சுற்றுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. எனவே, உலகக்கோப்பை போட்டிகளையும் பாதுகாப்புடன் நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன" என்று பிசிபி வட்டாரங்கள் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையிலான நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தின் பிடிவாதம் ஒருபக்கம், பாகிஸ்தானின் திடீர் கோரிக்கை மறுபக்கம் என 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஐசிசி, பிசிசிஐ மற்றும் வங்கதேச வாரியத்திற்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இருப்பினும், பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கைக்கு ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி செவிசாய்க்குமா அல்லது வங்கதேசத்தை சமாதானப்படுத்தி இந்தியாவில் விளையாட வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய நிலையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், ஆசிய கிரிக்கெட்டில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.