உலகக்கோப்பை இறுதிப் போட்டி
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. வங்கதேச அணியும், இந்திய அணியை வெல்ல துடிப்புடன் இருந்தது.
பந்தை எறிந்தார்
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அந்த அணியின் பந்துவீச்சு எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறினர். இரண்டாவது ஓவரில் இந்திய வீரர் சக்சேனா, கிரீஸை விட்டு வெளியேறி வந்த போது, பந்துவீச்சாளர் சாகிப் பந்தை எறிந்தார்.
தலைக்கு வந்த பந்து
ரன் அவுட் செய்ய எறியப்பட்ட அந்த பந்து, ஸ்டம்புகளுக்கு குறி வைத்து வீசப்படவில்லை. மாறாக சக்சேனாவின் தலைக்கு மிக அருகே சென்றது. அதையடுத்து சக்சேனா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் அம்பயர் வந்து சமாதானம் செய்து அவர்களைப் பிரித்து வைத்தார்.
ஷோரிபுல் இஸ்லாம் சீண்டல்
ஷோரிபுல் இஸ்லாம் என்ற வேகப் பந்துவீச்சாளர் கொஞ்சம் அதிகப்படியாகவே தன் வெறியை காட்டி வந்தார். பல முறை பந்து வீசும் போது வசவு வார்த்தைகளில் திட்டிக் கொண்டே இருந்தார். இந்திய அணியில் அரைசதம் அடித்து 88 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த போது, அவரை வழி அனுப்பி வைக்க சைகை செய்தார்.
பந்து வீச்சு அபாரம்
வங்கதேச பந்துவீச்சாளர்கள் உண்மையில் பந்து வீச்சில் மிரட்டினர். இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். ஆனால், அவர்களது செய்கைகள் தான் மிக மோசமாக இருந்தது. அடுத்து பேட்டிங் செய்யும் போதும் ஷோரிபுல் இஸ்லாம் செய்கைகள் மிக மோசமாக இருந்தது.
இந்தியா தடுமாற்றம்
இந்தியா இந்தப் போட்டியில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லாத நிலையில், இந்தியா 220 ரன்கள் எடுத்தால் நிச்சயம் போட்டியில் வெல்ல வாய்ப்பு இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், 178 ரன்கள் மட்டுமே வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயம் செய்தது.
வங்கதேசம் விக்கெட் இழப்பு
வங்கதேசம் சேஸிங்கில் துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டு, பின் சறுக்கியது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் அபாரமாக செயல்பட்டு 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். எனினும், வங்கதேசம் 7 விக்கெட்கள் இழந்த நிலையில், வெற்றி இலக்கை நெருங்கியது.
உணர்ச்சி வசப்பட்ட வீரர்
அப்போது கேப்டன் அக்பர் அலி, ஷோரிபுல் இஸ்லாம் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது வெற்றிக்கு 7 ரன்களே தேவை என்ற நிலையில், ஷோரிபுல் இஸ்லாம் வார்த்தைகளால் இந்திய வீரர்களை சீண்டிக் கொண்டே இருந்தார். வெற்றி பெறப் போகிறோம் என்பதால் உணர்ச்சி வசப்பட்ட அவர் மோசமாக நடந்து கொண்டார்.
ரசிகர்கள் மோதல்
போட்டி நெடுக இப்படி வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை சீண்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் இரு நாட்டு ரசிகர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், மாற்றி மாற்றி கூச்சல் போடுவதுமாக இருந்தனர். அதனால், பார்வையாளர்கள் பகுதியிலும் பரபரப்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற உடன், வங்கதேச ரசிகர்கள் சிலர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசி தங்கள் உணர்ச்சியைக் கொட்டினர்.
கீழே தள்ளினார்
அடுத்து, போட்டி முடிந்த உடன் வங்கதேச வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துடன் ஓடி வந்தனர். அப்போது இந்திய வீரர் ஒருவர், வங்கதேச வீரர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதை மனதில் வைத்து, அவருடன் சண்டை போட்டு, அவரை கீழே தள்ளினார். பின், இந்திய பயிற்சியாளர் மம்ப்ரே அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் ஐசிசி அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐசிசி விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.