மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 3 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடிக் கொண்டது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 25 ரன்களில் வெளியேறினர்.

நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 75 ரன்களும், தோனி 69 ரன்களும் எடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். அம்பத்தி ராயுடு 44 ரன்களுக்கும், சுரேஷ் ரெய்னா 38 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஸ்டுவர்ட் பின்னி 17 ரன்களும், அக்க்ஷர் பட்டேல் 10 ரன்களும் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 317 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் மோர்தசா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 318 ரன்களை எட்டினால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சவும்யா சர்க்கார் 40 ரன்கள் சேர்த்தார்.
லிட்டன் தாஸ் 34 ரன்களுக்கும், முஷ்பிகுர் ரஹீம் 24 ரன்களுக்கும், ஷாஹிப் அல் ஹசன் 20 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தொடர்ந்து வந்த சபீர் ரஹ்மான் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அவுட்டானார். நாசிர் ஹுசைன் 32 ரன்களில் வெளியேற இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்க தேசம் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் சுரேஷ் ரெய்னா 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் அஸ்வின், குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருது சுரேஷ் ரெய்னாவுக்கும், தொடர் நாயகன் விருது வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமானுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொடரை வங்க தேசம் ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.