முதல் பந்தை வீசும் முன்பே 10 ரன்கள் “ஓசி” கொடுத்த பாகிஸ்தான்.. எளிதாக வென்ற இந்திய மகளிர் அணி
கயானா : மகளிர் உலக 20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தியா தன் குரூப் சுற்றுப் போட்டிகளில் நேற்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது.
அதில் பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி செய்த தவறுகளால் இந்திய அணிக்கு 10 ரன்கள் பெனால்டி முறையில் கிடைத்தது.

கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா
குரூப் "பி" பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அதே பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இந்தியா பீல்டிங்கில் படு மோசமாக செயல்பட்டது. 3 எளிதான கேட்ச்களை இந்தியா கோட்டை விட்டது.

10 ரன்கள் பெனால்டி பெற்ற பாக்.
அதை பயன்படுத்திய பாகிஸ்தான் அணியின் பிஸ்மா மரூப் மற்றும் நிடா தார் அரைசதம் அடித்தனர். இவர்கள் இருவரும் ரன் குவிக்க ஓடும் போது ஆடுகளத்தின் அபாயகரமான பகுதியில் ஓடினர். அதற்காக 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்பட்டு இந்திய அணியின் ரன்களோடு சேர்க்கப்பட்டது. அடுத்து போட்டியின் கடைசி பந்தில் அதே போல நஹிதா கான் மற்றும் சிட்ரா நவாஸ் ஓடியதால், மீண்டும் 5 ரன்கள் பெனால்டி இந்தியாவிற்கு கிடைத்தது.

இந்தியா எளிதாக வெற்றி
இதையடுத்து, இந்தியா 134 ரன்கள் என்ற இலக்கை "ஓசி"யில் கிடைத்த 10 ரன்களோடு துரத்தியது. இந்திய அணியில் மிதாலி ராஜ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இந்தியா 19வது ஓவரின் கடைசி பந்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்மன்ப்ரீத் கௌர் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

மிதாலி கலக்கல் சாதனைகள்
மிதாலி ராஜ் இந்த ஆண்டில் மட்டும் டி20 போட்டிகளில் 6 அரைசதங்கள் அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக துவக்கம் அளித்த ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த துவக்கக் கூட்டணி என்ற பெருமையைப் பெற்றனர்.


Click it and Unblock the Notifications