ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கபடி அரை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது.

இந்திய கபடி அணி ஆறு முறை பாகிஸ்தான் அணியை ஆல் - அவுட் செய்து பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன கபடி அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த முறை ஆசிய விளையாட்டில் அனைத்து விளையாட்டிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களை தோற்கடித்து இருந்தனர். இது பெரும் பேசு பொருள் ஆனது.
இந்த நிலையில், கபடி அரையிறுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், பாகிஸ்தான் அணி எந்த வகையிலும் இந்திய அணியின் துடிப்பான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. கபடியில் ஆல் - அவுட் ஆகும் முறை உள்ளது. பொதுவாக கபடி ஆடும் அணிகள் ஒரு முறை முதல் மூன்று முறை வரை ஆல் - அவுட் ஆவது இயல்பு.
ஆனால், இந்த அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு முறை இந்தியாவிடம் ஆல் - அவுட் ஆனது. முதல் பாதியின் முடிவிலேயே இந்தியா மூன்று முறை பாகிஸ்தான் அணியை ஆல் - அவுட் செய்து இருந்தது. அப்போது இந்தியா 30 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போதே இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது.
பின்னர் இரண்டாம் பாதியில் பாகிஸ்தான் அணி புள்ளிகள் எடுக்க முயற்சி செய்தது. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 14 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. இந்தியா 61 புள்ளிகள் எடுத்ததுடன், இரண்டாம் பாதியில் மேலும் மூன்று முறை ஆல் - அவுட் செய்தது. மொத்தம் ஆறு முறை ஆல் - அவுட் செய்த இந்தியா 61 - 14 என்ற புள்ளிக் கணக்கில் அரை இறுதியை வென்றது.
இந்த வெற்றி மூலம் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மேலும், இறுதிப் போட்டியில் தோற்றாலும் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பலமான இந்திய கபடி அணி இறுதிப் போட்டியில் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.