கொழும்பு: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. கொழும்பு நகரில் நடந்த இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ராணா (71), சுப்மன் கில் (70) ரன்கள் குவித்தனர்.
இதன் பின்னர் விளையாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 239 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் தொடக்க வீரர் கெல்லி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கமிண்டு மெண்டிஸ் (53) ரன்கள் எடுத்தார்.
இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கோப்பையை கைப்பற்றியது. இந்தியா சார்பில் கேப்டன் அபிஷேக் சர்மா 29 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார்.