ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே சென்றுள்ள ரஹானே தலைமையிலான, இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ஹராரேவில் நேற்று, நடந்தது.

'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகும்பரா முதல் ஒருநாள் போட்டியைபோலவே, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆனால், கடந்த போட்டி போலன்றி, இம்முறை, இந்திய அணிக்கு ரஹானே 63, முரளி விஜய் 72 ரன்கள் அடித்து முதல் விக்கெட்டுக்கு சிறப்பான துவக்கம் தந்தது. கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய, அம்பதி ராயுடு 41 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். மனோஜ் திவாரி 22, உத்தப்பா 13, பின்னி 25 ரன்களில் திரும்பினார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஜிம்பாப்வே அணியில், தொடக்கமே சரிவாக இருந்தது. சிபாண்டா (2), மசகட்சா (5), கேப்டன் சிகும்பரா (9) நடையை கட்டினர். சிபாபா 72 ரன்கள் குவித்தார். வில்லியம்ஸ் (20), சிக்கந்தர் ராஜா (18), முடும்பாமி (32), கிரீமர் (27) ரன்கள் எடுத்த நிலையில், ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 209 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது.