ஹராரே : 3 வது ஒரு நாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சால் 83 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரஹானே 15 ரன்களுக்கும், முரளி விஜய் 3 ரன்களும் அடுத்தடுத்து வெளியேற பந்துகளை வீணடித்த உத்தபா 31 ரன்களும், திவாரி 10 ரன்களும் சேர்த்து பவிலியன் திரும்பினர்.

பாண்டேவும், ஜாதவும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அபாரமாக விளையாடிய ஜாதவ் சதமடித்தார்.
பாண்டே 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஜாதவ் 105 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பின்னி 18 ரன்களும் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
50 ஓவர்கள் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் மசாகட்சா 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, சிபாபா நிதானமாக ஆடி 82 ரன்கள் குவித்தார். சகாப்வா 27 ரன்களும், சிகும்புரா 10 ரன்களும், முடும்பாமி 22 ரன்களும் சேர்த்து பவிலியன் திரும்பினர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும், ஒற்றை இலக்க ரன்களிலும் நடையைக் கட்ட ஜிம்பாப்வே அணி 42.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளையும், ஷர்மா, ஹர்பஜன் சிங், அக்க்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அபாராமாக சதமடித்து இந்திய அணி வெற்றிக்கு அடிகோலிய ஜாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளையும் கைப்பற்றிய இந்திய அணி தொடரையும் 3 க்கு 0 என்ற கணக்கில் வென்றது.