ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேயில் நடந்தது.
இதில் டாசில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் மன்தீப் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மனீஷ் பாண்டே டக்அவுட் ஆனார். பின்னர் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஜோடி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த ராயுடு 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட டோணி 13 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஜாதவ் மட்டும் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்ட ஓவர்களில் அக்சார் படேல் (11 பந்துகளில் 20 ரன்கள்) அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் டொனால்ட் திரிபனோ 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சிபாண்டா 28, பீட்டர் மூர் 26, சிகும்புரா 16 ரன்கள் எடுத்தனர்.
58 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஜாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பரிந்தர் சரண் தொடர் நாயகனாக தேர்வு பெற்றார்.