கொல்கத்தா: இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடுவே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தி்ல உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி இன்று நடந்தது. மழை பெய்ததால் போட்டி 1 மணி நேரம் தாமதமாக துவங்கியது. மழை காரணமாக ஆட்டம் 18 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய அகமது ஷெசாத் மற்றும் ஷார்ஜில் கான் ஆகியோர் ரன் குவிக்க சிரமப்பட்டனர்.
குறிப்பாக இந்திய அணியின் சுழற் பந்து சாம்பவன் அஸ்வின் பந்து வீச்சை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்களால் ரன் குவிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 17 ரன்கள் எடுத்திருந்த ஷார்ஜில் கான் ரெய்னா பந்து வீச்சில் அவுட் ஆனார். அகமது ஷெசாத் 25 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய அப்ரிடி, அதிரடியாக ஆட முயன்று 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கிய மாலிக்கும், அக்மலும் அதிரடியாக ஆட, பாகிஸ்தானின் ரன் வேகமாக உயர்ந்த்து. சிறப்பாக ஆடிய அக்மல் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மாலிக்கை 26 ரன்களில் வெளியேற்றினார் நெஹ்ரா.
18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் நெக்ரா, பும்ரா, பாண்டியா, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
பாகிஸ்தானை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. எளிதான இலக்காக இருந்தாலும், இந்தியாவின் தொடக்கம் சிறப்பானதாக இருக்கவில்லை. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் தவானும் தடுமாறி வந்தார்.
15 பந்துகளைச் சந்தித்த அவர் 6 ரன்களில் அனுபவ வீரர் முகம்மது சமியின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரெய்னா, அடுத்தப் பந்திலேயே 'க்ளீன் போல்டு' ஆக மைதானமே அமைதியானது. அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டனர்.
இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது. இருப்பினும் இந்த ஜோடியால் வெகு நேரம் ஜோபிக்க முடியாதலால் யுவராஜ் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவட் ஆகினார். யுவராஜ்-கோஹ்லி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது.
பின்னர் களம் இறங்கிய கேப்டன் டோணி தனக்கே உரிய பாணியில் வழக்கம் போல வெற்றி ரன்னை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அதில் முகம்மது இர்ஃபான் பந்தில் லாங்-ஆப் திசையில் விளாசிய சிக்ஸரும் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. அபராமாக விளையாடிய விராத் கோஹ்லி 37 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.