மும்பை: விராட் கோலி, ரோகித் சர்மா தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் வெற்றியை பெற்று சிறப்பாக விளையாடி வந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் இரண்டு இறுதி போட்டிகளில் இந்திய அணி தகுதி பெற்றது.
மூன்றாவது இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு இருந்த நிலையில், அப்போதுதான் மிகப்பெரிய சரிவை இந்தியா சந்தித்தது. கடந்த ஆண்டு நியூசிலாந்து தொடரிலிருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை தழுவி வருகிறது.

நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இது இந்திய அணி வரலாற்றில் முதல் முறையாகும். இதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சென்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து தோல்விகளை தழுவி தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்தது.
இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும், இந்திய அணி தற்போது தோற்றுவிக்கிறது. இதன் மூலம் கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 7 தோல்வி, ஒரு வெற்றி, ஒரு டிரா என மோசமான ரெக்கார்டை வைத்திருக்கிறது.
கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் தான் இந்த சரிவை இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு அணியை சேர்ந்த ஐந்து வீரர்கள் சதம் அடிக்கும் அந்த அணி தோல்வியை தழுவி இருப்பது இதுவே முதல் முறையாகும். 148 ஆண்டுகால கிரிக்கெட்டில் இதுவரை இப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது கிடையாது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் இரண்டு சதம் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் மொத்தமாக ஐந்து சதம் அடித்திருந்தனர். இதனால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். இல்லையெனில் டிராவாவது அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் பயிற்சியாளர் கம்பீரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. பலரும் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த வாரம் புதன்கிழமை பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது.