மொஹாலி : கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மொஹாலியில் கிடைத்த இந்த வெற்றி இந்திய அணிக்கு பல பெருமைகளை தேடிக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

ஏற்கனவே இந்திய அணி, டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் முதல் இடத்தில உள்ளது. இந்த நிலையில், மூன்று வடிவங்களிலும் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தது.
இந்த அரிய நிகழ்வின் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவங்களிலும் முதலிடத்தை பிடித்த உலகின் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு முன் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே இந்த சாதனையை செய்து இருக்கிறது. 2012ல் தென்னாப்பிரிக்கா அணி மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் முதல் இடத்தில் இருந்தது.
தற்போது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.
இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை தக்கவைக்க, இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றியையாவது பெற்றாக வேண்டும்.
முன்னதாக இந்தப் போட்டியில், இந்திய அணி முதலில் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்தது.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர். ருதுராஜ் கெயிக்வாட் 71, சுப்மன் கில் 74, கே எல் ராகுல் 58*,சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் குவித்தனர். அவர்கள் ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணியிடம் 2 - 3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலியா இந்த தொடரையும் இழந்தால் அது உலகக்கோப்பை தொடருக்கு முன் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.