துபாய்: ஐசிசி டெஸ்ட் தர வரிசையில், இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இலங்கையிடம், ஆஸ்திரேலிய அணி வொயிட்வாஷ் தோல்வியடைந்ததால், இந்திய அணி புள்ளி கணக்கில் முதலிடம் பிடிக்க முடிந்தது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் கொண்ட தொடரில், விளையாட ஆஸ்திரேலிய அணி வந்தபோது அது 118 புள்ளிகளோடு, முதலிடத்தில் இருந்தது. ஆனால், 106 ரன்கள், 229 ரன்கள் மற்றும் 163 ரன்கள் வித்தியாசத்தில் 3 டெஸ்டுகளையும் தோற்ற ஆஸ்திரேலியா 10 புள்ளிகளை இழந்து, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே 108 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்துக்கு 4வது இடம்.

இதையடுத்து 112 புள்ளிகள் கொண்ட இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியா முதலிடம் பிடித்திருந்த போதிலும், நியூசிலாந்துடனான தொடரை ஆஸி.வென்று, அந்த இடத்தை பறித்துக்கொண்டது. இப்போது மீண்டும் இந்தியா இப் பரமபதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளோடு 2வது இடத்தில் உள்ளது. 18ம் தேதி தொடங்க உள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் டிரா ஆனாலோ அல்லது இந்தியா தோற்றாலோ பாகிஸ்தான் முதலிடம் பிடித்துவிட வாய்ப்புள்ளது. அப்படி செய்தால், 2003 முதல் புதிய ரேங்கிங் நடைமுறை வந்த பிறகு, பாகிஸ்தான் அணி முதல் முறையாக டாப் இடத்தை ருசித்து வரலாறு படைக்க வாய்ப்புள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா வென்றால், தற்போதுள்ள முதலிடத்தையே இந்திய அணியால் தொடர்ந்து வகிக்க முடியும்.