மெல்போர்ன்: உலக கோப்பையில் லீக் ஆட்டங்கள் ஆறிலும் தான் சந்தித்த எதிரணிகளை ஆல் அவுட் ஆக்கி சாதனை படைத்தது இந்தியா. காலிறுதியிலும், வங்கதேசத்தை ஆல்-அவுட் செய்ததன் மூலம், உலக கோப்பை தொடர் ஒன்றில், தொடர்ந்து 7வது முறையாக எதிரணியை ஆல்அவுட் செய்த முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளிலும் அவ்வணிகளை ஆல் அவுட் செய்தனர் இந்திய பவுலர்கள்.

இந்நிலையில், காலிறுதியில் இன்று வங்கதேசத்தை சந்தித்தது இந்தியா. இப்போட்டியில் இந்தியாவின் 302 ரன்களை விரட்டி பிடிக்க முயன்ற வங்கதேசத்தை ஆல்அவுட் செய்யும் முனைப்பில் பந்து வீசினர் இந்திய பவுலர்கள்.
இருப்பினும் 43வது ஓவர் வரை வங்கதேசம் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. எனவே, எஞ்சிய 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-அவுட் சாதனையை நிகழ்த்த முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் கடைசி நேரத்தில், உமேஷ் யாதவ் வீசிய அனல் பறக்கும் பந்துகளால் சாதனை சாத்தியமாயிற்று. 45வது ஓவரிலேயே 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம்.
இதன்மூலம், உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, அடுத்தடுத்த 7 போட்டிகளிலும் எதிரணிகளை ஆல்அவுட் ஆக்கிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.