சிட்னி: ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பெற்ற நிலையில் அதன் பயணத்திற்கு இந்தியா இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முதல் 4 ஒன்டே போட்டிகளை இந்தியா இழந்திருந்தாலும், சிட்னியில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது இந்தியா.

ஆஸ்திரேலிய மண்ணில் 300 ரன்களுக்கு மேல் அந்த அணி ஸ்கோர் செய்த பிறகும் தோல்வியடைந்தது இதுதான் முதல் முறை. மேலும், ஆஸ்திரேலியா 2014ம் ஆண்டு நவம்பர் மாதம், 16ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன்டே போட்டியில் தோற்ற பிறகு வரிசையாக அம்மண்ணில் நடந்த 18 போட்டிகளில் (இந்தியாவுடனான முதல் 4 வெற்றிகளையும் சேர்த்து) தோல்வியே அடையவில்லை. இது ஒரு புது சாதனை.
ஆனால், இன்று 19வது முறையாக தொடர் வெற்றி பெறும் ஆஸ்திரேலியாவின் கனவை இந்தியா கலைத்துள்ளது.
மேலும், தங்கள் அணியை சேர்ந்த இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த போட்டிகளில் 4 முறை மட்டுமே ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. அதில் 3 முறை இந்தியாதான், தோற்கடித்துள்ளது. இன்றைய போட்டியில் வார்னர், மார்ஷ் சதம் அடித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவுக்காக ஆடிய பேட்ஸமேன்களில் குறைந்த போட்டிகளில் சதம் அடித்தவர் என்ற பெருமையை இன்று தனது 3வது போட்டியில் செஞ்சுரி அடித்த மனிஷ் பாண்டே பெற்றுள்ளார். கேதர் ஜாதவ் 4வது போட்டியிலும், மனோஜ் பிரபாகர் மற்றும் டோணி இருவரும் 5வது போட்டியிலும் சதம் அடித்திருந்தனர்.
இதுகுறித்து இந்திய கேப்டன் டோணி கூறுகையில், நான்கு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பெரும் சவாலாகத்தான் விளங்கியது. சில தருணங்களால் வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால் கடைசி ஆட்டத்தில் வெற்றியை பெற்றோம் என்றார்.