டெண்டுல்கர் சாதனை சதம்-கம்பீர், ஷேவாக், யுவராஜ் அதிரடி-இந்தியா ரன் குவிப்பு

இன்றைய போட்டியில் உலகக் கோப்பைப் போட்டிகளில் 5வது சதத்தை எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்தார்.
உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இன்று இந்தியா தனது 2வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது.
முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எளிதில் வென்ற இந்தியா, இன்றைய போட்டியில், முதல் போட்டியில் நெதர்லாந்தை கடுமையாக போராடி வென்ற இங்கிலாந்துடன் மோதியது.
நெதர்லாந்துடனான மோதலைப் போலவே, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து பந்து வீச்சு தடுமாற்றத்துடன் இருந்தது. அதேசமயம், இந்திய பேட்டிங் பிரமாதமாக இருந்தது.
டாஸ் வென்ற கேப்டன் டோணி, முதலில் பேட்டிங்கைத்தேர்வு செய்தார். ஷேவாக்கும், சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே அதிரடியாக ஆடினார் ஷேவாக். பந்து கேட்ச் ஆகும் அபாயத்தில் சென்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பந்து பாய்ந்து சென்று பவுண்டரியை நோக்கி ஓடியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டிய ஷேவாக் அடுத்த 2 பந்துகளில் மீண்டும் ஒரு முறை அவுட் ஆகத் தெரிந்தார். ஆனால் அப்போதும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்கவே தப்பினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்தார் ஷேவாக். அதேசமயம், அவரது அதிரடி ஆட்டம் அபாயகரமானதாகவும் இருந்ததால் 35 ரன்களிலேயே ஆட்டமிழக்க நேரிட்டது.
அதே வேளை ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்த சச்சின் பின்னர் வி்ஸ்வரூபம் எடுத்தார். ஷேவாக் ஆட்டமிழந்த பின்னர் ரன்குவிப்பை அவர் தொடர்ந்தார். வந்த பந்தையெல்லாம் பிரமாதமாக எதிர்கொண்ட சச்சின் பவுண்டரிகளுக்குப் பந்துகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
சாதனை சதம்:
பிரமாதமாக ஆடிய சச்சின், பந்துகளை சரியாக கணித்து விளாசிய விதம் ரசிகர்களை வெகுவாக குஷிப்படுத்தியது. அபாரமாக ஆடிய அவர், 115 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகள், 5 சிக்சர்களை விளாசி 120 ரன்களைக் குவித்தார்.
இது சச்சின் விளாசிய 5வது உலகக் கோப்பைப் போட்டி சதமாகும். மேலும் இது புதிய சாதனையுமாகும். இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சமாக 4 சதங்களை விளாசி, கங்குலி, ரிக்கி பான்டிங, மார்க் வாக் ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.
அதை இன்று சச்சின் முறியடித்துள்ளார். கங்குலியும், வாக்கும் ஓய்வு பெற்று விட்டனர். எனவே சச்சினுக்குப் போட்டியாக ரிக்கி பான்டிங் மட்டுமே உள்ளார். எனவே இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரு வீரர்களுக்கும் இடையே சாதனை செஞ்சுரி படைப்பதில் கடும் போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சச்சினுக்கு இது 47வது ஒரு நாள் சதமும் ஆகும்.
கம்பீர் கம்பீர ஆட்டம்:
இந்தியத் தரப்பில் கலக்கிய இன்னொருவர் கம்பீர். சச்சினுடன் இணைந்து சிறப்பாக ஆடிய இவர் அரை சதம் போட்டார். 61 பந்துகளைச் சந்தித்த கம்பீர் 51 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த யுவராஜ் சிங்கும், கேப்டன் டோணியும் ரன் குவிப்பை தொடர்ந்து மேற்கொண்டனர். குறிப்பாக யுவராஜ் சிங், சரியான வாய்ப்புகளில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வந்தார்.
சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் தனது 4வது உலகக் கோப்பை அரை சதத்தை இன்று போட்டார். அவர் எடுத்த ரன்கள் 50 பந்துகளில் 58 ரன்கள். இது அவருக்கு 46வது ஒரு நாள் போட்டி அரை சதமாகும்.
அவர் அவுட்டாகிச் சென்ற சில நிமிடங்களிலேயே டோணியும் 25 பந்துகளில் 31 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசி வரிசையில் இறங்கிய யூசுப் பதான் அதிரடியாக ஆடி 14 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஆரம்பத்திலிருந்து மிரட்டிய ஒரே பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் மட்டுமே. இவரது பந்துகளை சமாளிக்க ஷேவாக், சச்சின், கம்பீர் என அனைவருமே திணறினர். யுவராஜ் சிங் மட்டுமே சற்று சமாளித்து ஆடினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications