
கடினமான இலக்கு
இதையடுத்து, 405 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் அலஸ்டர் குக் - ஹசீப் ஹமீத் முதல் விக்கெட்டுக்கு மிக, மிக பொறுமையாக விளையாடினர். இருவரும் 50 ஓவர் தாக்குப்பிடித்து 75 ரன் சேர்த்தனர். அவர்களின் விக்கெட்டில் ஒன்றை கூட வீழ்த்த முடியாமல் தவியாய் தவித்தனர் இந்திய பவுலர்கள்.

பிட்சிலேயே படுத்துவிட்டனர்
வலது கை பேட்ஸ்மேனான, ஹமீத் 144 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன் எடுத்தார். 3 பவுண்டரிகள் மட்டுமே சேகரித்தார். எப்படியாவது டிரா செய்துவிட வேண்டும் என்ற கவனத்தை அவரது பேட்டிங்கின்போது பார்க்க முடிந்தது. கடைசியாக, அஷ்வின் சுழலில் ஹமீத் எல்பிடபிள்யூ ஆனார். கேப்டன் குக்கும் லேசுப்பட்டவர் இல்லை. 188 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன் மட்டுமே எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் வந்தன. அவரை ஒருவழியாக ஜடேஜா காலி செய்தார்.

நகம் கடிப்பு
4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 5 ரன்னுடன் களத்தில் நின்றார். கை வசம் 8 விக்கெட் இருந்த நிலையில், வெற்றிக்கு கடைசி நாளில் 318 ரன் தேவை என்ற இலக்குடன் இங்கிலாந்து இன்று களமிறங்கியது. நேற்றைய ஆட்டம்போலவேதான் இன்றும், ஆட்டம் ஜவ்வாக இழுக்கப்போகிறது. வெற்றி கிடைக்குமோ, கிடைக்காதோ என நகத்தை கடித்தனர் ரசிகர்கள்.

இன்ப அதிர்ச்சி
ஆனால், இந்திய ரசிகர்களுக்கு காலை முதல் இன்ப அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஜோ ரூட் ஷமி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 25 ரன்களுக்கு நடையை கட்டினார். பென்டக்கட் 16 பந்துகளை சந்தித்து கட்டை போட்டு, ரன் ஏதும் எடுக்காத நிலையில், அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒற்றை இலக்கம்தான்
அதன்பிறகு ஜானி பெய்ர்ஸ்டோவை தவிர அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர். ஜானி மட்டும் கடைசி வரை போராடி 34 ரன்களுடன் களத்தில் நின்றார். இங்கிலாந்தின் ஆதிக்கத்தை பார்த்து பயப்படாமல் கடைசி நாளில், இந்திய பவுலர்கள் காட்டிய தீரமே, உணவு இடைவேளை நேரத்திற்குள் இந்தியாவிற்கு வெற்றியை ஈட்டித் தந்தது. ஜெயந்த் யாதவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதையும் காட்டியது.


Click it and Unblock the Notifications











