டர்பன்: 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டத்தில், பாகிஸ்தானை பவுல் அவுட் முறையில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் இந்தியா நுழைந்தது. தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, ஸ்காட்லாந்தை சந்தித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மழை வந்தாதல் போட்டி கைவிடப்பட்டது. இது இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. காரணம், அடுத்த போட்டியில், அது பாகிஸ்தானை சந்திக்க வேண்டியிருந்ததால். இதனால் பாகிஸ்தானுடனான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு. இந்த நெருக்கடியில் பாகிஸ்தானை டர்பனில் நடந்த போட்டியில் இந்தியா சந்தித்தது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்தியா பேட்டிங்கில் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பினர். இதனால் இந்தியா நிலை தடுமாறி ஆடியது. இந்த நிலையில் ராபின் உத்தப்பாவும், கேப்டன் டோணியும் சேர்ந்து தடுமாற்றத்தை நிறுத்தி அதிரடி ஆட்டத்துக்குத் தாவினர். உத்தப்பா சிறப்பாக ஆடி 50 ரன்களைச் சேர்த்தார். டோணி 33 ரன்கள் எடுத்தார். இர்பான் பதான் சிறப்பாக ஆடி 33 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 141 ரன்களை எடுத்தது. முகம்மது ஆசிப் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பின்னர் இறங்கிய பாகிஸ்தான் இந்தியப் பந்து வீச்சை சமாளித்து ஆடியது. கேப்டன் சோயப் மாலிக் 20 ரன்கள் எடுத்தார். மிஸ்பா உல் ஹக் 53 ரன்களைக் குவித்தார். பாகிஸ்தான் அணி வேகமாக வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. இதனால் பார்வையாளர்கள் மத்தியில் கடும் டென்ஷன். இந்த நிலையில், கடைசி விக்கெட்டை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து போட்டியை டையில் முடித்தனர். இதையடுத்து பவுல் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது ஒவ்வொரு அணிக்கும் 5 வாய்ப்புகள் கொடுக்கப்படும். அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்து வீசி, ஸ்டெம்பை வீழ்த்த வேண்டும். வீழ்த்தும் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். அதன்படி இந்திய அணிக்கும், பாக் அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இந்திய அணி சார்பில் பந்து வீசிய ஷேவாக், ஹர்பஜன்சிங், உத்தப்பா ஆகியோர் ஸ்டம்பை சாய்த்தனர். ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் ஒரு ஸ்டம்பை கூட சாய்க்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா அடைந்த இந்த திரில்லான வெற்றியை ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். சூப்பர்-8 சுற்று போட்டிகள் நாளை தொடங்குகின்றது. இதில் கலந்து கொள்ள ஏ பிரிவிலிருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகியவை தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முன்னேறியுள்ளன. சி பிரிவில் இலங்கை, நியூசிலாந்தும், டி பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும் தகுதி பெற்றன. 20-ந் தேதி வரை சூப்பர் 8 சுற்று நடை பெறும். இந்த சுற்றில் விளையாடும் 8 நாடுகளும் இ, எப் என 2 பிரிவாக பிரிக்கப்படும். இன் றைய போட்டி முடிவில் எந் தெந்த நாடுகள் எந்தப் பிரி வில் இடம் பெறும் என்பது தெரிந்து விடும். சச்சின் கேப்டன்?: இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதால் அவருக்குப் பதில் புதிய கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய கேப்டன் தேர்வு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அக்கூட்டத்தில் புதிய கேப்டன் யார் என்பதை தேர்வுக் குழுவினர் தீர்மானிப்பார்கள். இது தொடர்பாக தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் கூறும்போது, கேப்டன் பதவியில் இருந்து டிராவிட் ராஜினாமா செய்தது அவரது தனிப்பட்ட முடிவு. இது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. 18-ம் தேதி புதிய கேப்டனை தேர்வு செய்வோம் என்றார். விலகலுக்கு சச்சின் -வெங்ஸ் காரணம்?: இதற்கிடையே, டிராவிட் கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு சச்சின் டெண்டுல்கரும், தேர்வுக் குழுத் தலைவரான வெங்கசர்க்காரும்தான் காரணம் என கூறப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கிரேக் சேப்பல், அதற்குப் பின்னர் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அதில், சில மூத்த வீரர்கள் டிராவிடை மிகவும் நெருக்குதலுக்கு ஆளாக்குகின்றனர். அவர்களின் செல்வாக்கு அணி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது. அவர்களிடமிருந்து மீண்டு சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கிறார் டிராவிட். அவர் நீண்ட காலம் இப்பதவியில் நீடிக்க மாட்டார். அதேபோல அவர் நீண்ட நாள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சிலரின் ஆதிக்கம் அணியில் அதிகம் உள்ளது என்று கூறியிருந்தார். சேப்பலின் கருத்து உண்மைதான் என்பது அணியில் நிலவும் கோஷ்டிப் பூசலைப் பார்த்தாலே தெரியும். சில வீரர்கள் சச்சினுக்கு ஆதரவாகவும், சிலர் கங்குலிக்கு ஆதரவாகவும் உள்ளனர். டிராவிடுக்கு ஆதரவானவர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். மேலும் மேற்கு மண்டலம் என்று சொல்லப்படும் மும்பையின் ஆதிக்கமும் இந்திய அணியைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இது கவாஸ்கர் காலத்திலிருந்தே இந்திய அணியில் இருந்து வரும் சாபக் கேடாகும். மும்பை வீரர்களைத் தவிர வேறு யாரும் அணியில் இடம் பெறக் கூடாது. அவர்கள் மட்டுமே நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய வீரர்களாக ஜொலிக்க முடியும். மற்ற வீரர்கள், திறமையானவர்களாக இருந்தாலும் கூட உருப்படியாக விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். சரத்பவார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக வந்த பின்னர் முக்கியப் பதவிகளில் மும்பைக்காரர்ளே அதிகம் உள்ளனர். கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் என யாரைப் பார்த்தாலும் மும்பைக்காரர்கள்தான். குறிப்பாக சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின்போது வெங்சர்க்காருக்கும், டிராவிடுக்கும் இடையே பூசல் ஏற்பட்டதாம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது. ஒருநாள் தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது. அதை வெங்சர்க்கார் விமர்சித்து இருந்தார். டிராவிட் 3-வது வீரராக களமிறங்கினால் நன்றாக ஆடக் கூடியவர். அப்படி இருக்கையில், யுவராஜ்சிங், காம்பீர், தினேஷ் கார்த்திக்கை ஏன் 3-வது வீரராக இறக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது டிராவிடை அப்செட் செய்து விட்டதாம். டெஸ்ட் தொடர் வெற்றியைப் பார்க்காமல் ஒரு நாள் தொடர் இழப்பை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பதா என்று அவர் ஆதங்கமாக இருந்தாராம். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் டிராவிட் பாலோஆன் கொடுக்க வில்லை. இதற்காக வும் அவர் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இப்படி சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அணியில் சில வீரர்கள், டிராவிட் சொல்வதை கேட்பதே இல்லையாம். இதனாலும் வெறுத்துப் போயிருந்தார் டிராவிட். இப்படி ஒட்டுமொத்தமாக பிரச்சினைகள் சுழன்றடித்ததால் கடுப்பாகிப் போய்த்தான் டிராவிட் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. டிராவிடுக்கு எதிரான முக்கிய மூத்த வீரர் சச்சின் என்றும் பலர் கை காட்டுகிறார்கள். இதை சேப்பலும் கூட கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்த அறிக்கையிலும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. கேப்டனாக சச்சின் ஆர்வம்: இதற்கிடையே, டிராவிட் பதவி விலகியவுடனேயே, அப்பதவிக்கு தான் வரத் தயார் என சச்சின், கிரிக்கெட் நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய அணியில் சீனியராக உள்ளவர் சச்சின்தான். கங்குலியும் இருக்கிறார். ஆனால் அவருக்குக் கண்டிப்பாக கேப்டன் பதவியைத் தர மாட்டார்கள் என்பது எல்.கே.ஜி. குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். சச்சின் ஏற்கனவே கேப்டனாக இருந்தவர். ஆனால் இந்தியாவின் மோசமான கேப்டன் என்ற பெயரையும் எடுத்தவர். இதனால்தான் இத்தனை காலமாக கேப்டன் பதவியை எதிர்பார்க்காமல் இருந்து வந்தார் சச்சின். ஆனால் தற்போது கேப்டன் பதவியை ஏற்க அவர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2000மாவது ஆண்டு கேப்டன் பதவியிருந்து விலகினார் சச்சின். அதன் பின்னர் கங்குலி கேப்டன் ஆனார். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயர் கங்குலியிடம்தான் உள்ளது. 2005ம் ஆண்டு டிராவிட் கேப்டனாக்கப்பட்டார். ஒரு வேளை இந்திய அணி கேப்டன் பதவியில் இளம் ரத்தம் இருக்கட்டும் என அணி நிர்வாகம் விரும்பினால், ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் டோணியை கேப்டனாக்கக் கூடும் என்று தெரிகிறது. டோணி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக உள்ளார். 20-20 அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.