டோணி போட்ட தப்புக் கணக்கு-ஸ்ரீசாந்த்தை சேர்த்தது வீணானது!
மும்பை: 7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.

பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து வீச்சாளராக இருக்கட்டும் என்று ஸ்ரீசாந்த்தை சேர்த்தார் டோணி.
ஆனால் டோணியின் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது. வெறும் 8 ஓவர்களை மட்டுமே போட்ட ஸ்ரீசாந்த் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.
அதேபோல ஜாகிர்கானும் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவர்கள் போட்ட அவர் 3 மெய்டன் போட்டு 60 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும் 2 விக்கெட்களை எடுத்தார்.
மற்ற பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் போட்டு 50 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பரவாயில்லை. 10 ஓவர்களைப் போட்ட அவர் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.
இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில்தான் இலங்கை ரன்களைக் குவித்து விட்டது. இந்த இடத்தில்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டியது அவசியம். ஆனால் அந்த சமயத்தில்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை தாறுமாறாக போட்டனர்.
ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சச்சின், விராத் கோலி என 7 பேர் பந்து வீசியும், இலங்கையின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய், இந்தியாவின் ஓட்டைப் பந்து வீச்சு மீண்டும் ஒருமுறை பல்லைக் காட்டி விட்டது.
Story first published: Thursday, June 7, 2012, 12:25 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications