லார்ட்ஸ் வரலாற்றிலேயே மெகா ஸ்கோர்.. இரக்கமே இல்லாமல் இந்திய பந்துவீச்சை பொளந்த இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்து, கடந்த 1975ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி அடித்த 334 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்தது. இதுவே லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சை இரக்கமே இல்லாமல் வெளுத்து வாங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஜோடி அபார தொடக்கம் அளித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக அணுகி ரன் குவித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 181 பந்துகளில் 192 ரன்கள் குவித்து மாபெரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நங்கூரம் போல் மைதானத்தில் நிலைத்து நின்ற பென் டக்கெட், இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்து 135 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை பயன்படுத்தி அனுபவ வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் கடைசி ஓவர்களில் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்தின் ஜோ ரூட், 154.17 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 48 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், மைதானத்திற்கு வந்த வேகத்திலேயே 325.00 என்ற அசாத்திய ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 13 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் இந்த அதிரடியால் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.
மறுபுறம், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாக சொதப்பியது. இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் 10 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 97 ரன்களை வாரி வழங்கி மிக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மற்றொரு பந்துவீச்சாளரான பிரின்ஸ் யாதவ் 10 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 79 ரன்களை வாரி இறைத்தார்.
அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 72 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 79 ரன்களை விட்டுக்கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 10 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications
