சிட்டகாங்: வங்கதேச கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் மற்றும் ஷஹாதத் ஹூசேன் ஆகியோரின் அபாரப் பந்து வீச்சால் 243 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்துள்ளது இந்தியா. சச்சின் டெண்டுல்கர் ஒற்றை ஆளாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். இது சச்சினுக்கு 44 வது டெஸ்ட் சதமாகும்.
சிட்டகாங் நகரில் நேற்று இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம், இந்தியாவை பேட் செய்யப் பணித்தது.
முன்னணி ஆட்டக்காரர்களில் ஷேவாக் தவிர மற்ற அனைவருமே படு சொதப்பலாக ஆகி படபடவென்று அவுட் ஆகி இந்தியாவை நிலை குலைய வைத்து விட்டனர்.
வங்கதேச பந்து வீச்சாளர்கள் ஷாஹிப் மற்றும் ஷஹாதத் ஆகியோரின் அபாரப் பந்து வீச்சை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இந்தியா 8 விக்கெட்களை இழந்து 213 ரன்களுடன் மோசமான நிலையி்ல இருந்தது இந்தியா. இந்தியத் தரப்பில் சச்சின் மட்டுமே சிறப்பாக ஆடி 76 ரன்களை எடுத்திருந்தார். ஷேவாக் 52 ரன்கள் எடுத்திருந்தார்.
இன்று காலை 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா, மேலும் 30 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையி்ல முதல் இன்னிங்ஸை இழந்தது.
சச்சின் டெண்டுல்கர் நிதானமாக ஆடி சதம் போட்டார். இது அவருக்கு 44வது டெஸ்ட் சதமாகும். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின் 105 ரன்களை எடுத்தார்.
வங்கதேச பந்து வீச்சாளர்கள் ஷஹாதத் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் தலா ஐந்து விக்கெட்களை அள்ளினர்.
பின்னர் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. ஜாகிர்கான் அட்டகாசமாக பந்து வீசி தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் (31), இம்ரல் கயஸ் (23) ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஷஹரியார் நபீஸை (4) இஷாந்த் சர்மா வெளியேற்றினார். இதனால் 59 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்களை இழந்து தடுமாற்ற நிலையில் உள்ளது வங்கதேசம்.