டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது. அந்நாட்டில் 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது திடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், வீரர்கள் சோர்வாக இருப்பார்கள் என்பதுடன் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான ஒளிபரப்பு உரிமம் தொடர்பான பிரச்சனை நீடிப்பதாலும் ஜிம்பாப்வே தொடரை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இருப்பினும் வங்கதேசத்திடம் அடிவாங்கியதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே சென்று அங்கும் மண்ணைக் கவ்வி மானத்தை காற்றில் பறக்கவிடாமல் இருப்போமே என்ற முன்னெச்சரிக்கையால்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
இந்திய அணியின் வங்கதசே பயணம் மிகப் பெரும் கேவலமாக மாறியுள்ளது. வெகு சமீபத்தி்தான் ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் பல வல்லரசு அணிகளை பயமுறுத்திய இந்திய அணியா இது என்று அனைவரும் ஷாக் ஆகும் வகையில் ஆடி வருகிறது இந்தியா.
டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாமல் போனது. மழை ஒரு காரணம். ஆனால் ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் மிகக் கேவலமாக தோற்று வருகிறது இந்தியா. இன்னும் ஒரு போட்டிதான் உள்ளது. அதில் தோற்றாலும் கவலையில்லை என்று பேசுகிறார் கேப்டன் டோணி. ராஜினாமா செய்யவும் தயார் என்றும் பேசுகிறார்.
எனவேதான் நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்து ஜிம்பாப்வே தொடரை இந்தியா ரத்து செய்து விட்டதாக கூறுகிறார்கள்.