"இசட்" டோணி.. இனி "ஒய்" டோணி.. பாதுகாப்பைக் குறைத்த ஜார்க்கண்ட் அரசு!
ராஞ்சி: இதுவரை இசட் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த இந்திய கேப்டன் எம்.எஸ்.டோணி, இனிமேல் ஒய் பிரிவு பாதுகாப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இசட் பிரிவை விட குறைந்த அளவிலான பாதுகாப்பாகும்.
சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில், இந்த பாதுகாப்புக் குறைப்பு முடிவை எடுத்துள்ளது அரசு. இது காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையும் டோணியின் பாதுகாப்பை குறைத்துள்ளது.
இதுகுறித்து மாநில டிஜிபி ராஜீவ் குமார் கூறுகையில், டோணி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

ஒரு மிரட்டலும் இல்லையே
மேலும் அவர் கூறுகையில், உளவுப் பிரிவுகளின் தகவலின்படி டோணிக்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

7 போலீஸ் மட்டுமே
இதுவரை டோணிக்கு இசட் பிரிவின் கீ்ழ் 9 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது அது 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாதுகாப்பு பக்காவாக இருக்கும்
அதேசமயம், அவர் ராஞ்சிக்கு வரும்போதும், இங்கு இருக்கும்போதும் அவருக்கு பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இருக்காது. உண்மையில் இசட் பிரிவை விட அதிகபட்சமான பாதுகாப்பையே நாங்கள் அவருக்குத் தந்து வருகிறோம் என்றார் அவர்.

நக்சலைட்கள் பயம்
டோணியின் வீடு ராஞ்சி நகரில், ஹர்மு என்ற இடத்தில் உள்ளது. அவர் ராஞ்சிக்கு வரும்போதெல்லாம், 50 கிலோமீ்ட்டர் தொலைவில் உள்ள தியோரி கோவிலுக்குப் போவார். இந்தக் கோவிலுக்குப் போகும் பாதையில் நக்சலைட்கள் ஆதிக்கம் மிக்க பகுதிகள் சில உள்ளன. மேலும் அவர் ராஞ்சி நகரில் இருக்கும்போதெல்லாம் பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நகரைச் சுற்றி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications