கொழும்பு: ஓய்வு பெற்ற இலங்கை நட்சத்திர வீரர் குமார் சங்ககாராவுக்கு இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட தனது ஜெர்சியை பரிசாக அளித்தார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி.
இந்தியா-இலங்கை மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இப்போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா விடைபெற்றார்.
போட்டி முடிந்ததுமே இந்திய வெற்றி கொண்டாட்டத்தைவிட, சங்ககாராவின், பிரியாவிடை நிகழ்ச்சிகள்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இந்திய கேப்டன் கோஹ்லி '269' என்ற எண் பொரிக்கப்பட்ட தனது ஜெர்சியை சங்ககாராவுக்கு பரிசாக அளித்தார்.
இந்த ஜெர்சியில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு சங்ககாரா மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜெர்சியை பெற்றுக்கொண்டு சங்ககாரா பேசுகையில், "உங்கள் அன்பு மற்றும் அன்பு கலந்த வார்த்தைகளுக்காக விராட் கோஹ்லிக்கும், ஒட்டுமொத்த இந்திய அணிக்கும், நன்றி. கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அணிக்கு நீங்கள் வலுவான எதிர் அணியாக செயல்பட்டு வருகிறீர்கள். இன்று நாங்கள் தோற்றதை பற்றி கவலைப்படவில்லை. அடுத்த போட்டியில் உங்களை வெல்ல முயலுவோம்.
வலுவான போட்டி கொடுத்ததற்காகவும், உங்களுக்கு எதிராக விளையாடும் மரியாதையை தந்ததற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சங்ககாரா தெரிவித்தார்.