
2வது ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி புனேவின் எம்சிஏ மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. கடந்த 23ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

6வது வெற்றி
இதையடுத்து இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரை கைகொள்ளும். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 6வது ஒருநாள் தொடரை வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தும். கடந்த 2005 -06, 2008 -09, 2011 -12, 2012 -13 மற்றும் 2016 -17 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை இந்தியா தொடர்ந்து வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரேயாசுக்கு பதில் சூர்யகுமார்
கடந்த போட்டியில் இரு அணிகளிலும் தலா இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தனது சர்வதேச ஒருநாள் அறிமுக போட்டியில் இன்றைய தினம் விளையாடவுள்ளார்.

ரிஷப் பந்த் களம்?
இதேபோல, ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் ரிஷப் பந்த் விளையாட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர்கள் க்ருணால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பங்கும் இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனைக்கு காத்திருக்கும் கோலி
இதேபோல கடந்த போட்டியில் 56 ரன்களை அடித்த கேப்டன் விராட் கோலி, இன்றைய போட்டியில் மேலும் 79 ரன்களை அடித்தால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை குவித்த இரண்டாவது இந்தியர் மற்றும் 4வது சர்வதேச வீரர் என்ற சாதனையை மேற்கொள்ள முடியும். இதில் சச்சின் முதல் வீரராக 6976 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக்குவஸ் காலிஸ் உள்ளனர்.

மார்கன், பில்லிங்ஸ் நீக்கம்
இதேபோல இங்கிலாந்து அணியிலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் இயான் மார்கன் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரு போட்டிகளில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் இன்றைய போட்டியில் டேவிட் மலான் களமிறக்கப்பட உள்ளார்.

அதிக ஸ்கோருக்கு வாய்ப்பு
இன்றைய போட்டியில் வானிலை சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போட்டி நடைபறெவுள்ள எம்சிஏ மைதானத்தில் இன்றைய தினம் அதிகமான ஸ்கோர் அடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











