லண்டன்: கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. ஐந்தாம் நாளில் 6 விக்கெட் மீதமிருக்கும் நிலையில் இன்னும் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது இந்திய அணி.
ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில், குறிப்பாக லார்ட்ஸ் போன்ற பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது சவாலான காரியம். இந்நிலையில், இந்த இலக்கை எட்டி இந்திய அணி எட்டுவதி சாத்தியமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி மிகக் குறைவான இலக்கையே சேஸ் செய்து இருக்கிறது. 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்கள் வீழ்ந்து இருப்பதும் அதையே உணர்த்துகிறது.

லார்ட்ஸ் மைதானத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 344 ரன்கள் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு, மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துக்கு எதிராக இந்த இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் கார்டன் கிரீனிட்ஜ் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து அணி 2004-ல் நியூசிலாந்துக்கு எதிராக 282 ரன்களும், சமீபத்தில் ஜூன் 2025-ல் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 ரன்களும் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளன.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான சேசிங் மிகவும் குறைவாகவே உள்ளது. 1986 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, 136 ரன்கள் என்ற இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து எட்டி வெற்றி பெற்றது. இதுவே அங்கு இந்தியாவின் ஒரே வெற்றிகரமான சேசிங் ஆகும். அதன்பிறகு, 2014 மற்றும் 2021-ல் பெற்ற வெற்றிகள் இரண்டுமே முதலில் பேட்டிங் செய்து, இலக்கை நிர்ணயித்து வென்றவை.
தற்போது, 2025-ல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டினால், அது லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்காக புதிய வரலாறு படைக்கும்.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.