4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் டாஸ் வென்று பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி
நேற்றைய தினமும் இந்திய ஸ்பின்னர்கள் ரவி அஸ்வின், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் தலா 3, 4 மற்றும் ஒரு விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணிக்கு கடுமையான நெருக்கடியை தந்தனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திணறிய இங்கிலாந்து
இந்திய பௌலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அரைசதத்தை கடந்தார். மேலும் அணியின் லாரன்ஸ் 46, ஓலி போப் 29 ரன்களை எடுத்தனர். ஆயினும் எந்த வீரரும் தொடர்ந்து நிலைக்கவில்லை. பார்ட்னர்ஷிப்பும் பலனளிக்கவில்லை.
இந்தியா நிதான ஆட்டம்
76 ஓவர்களிலேயே இங்கிலாந்து சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி சுப்மன் கில் விக்கெட்டை இழந்தது. கில் டக் அவுட் ஆனார். ஆயினும் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் புஜாரா நிதானமாக ஆடினர். தொடர்ந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இந்திய அணி 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்துள்ளது.