மும்பை : வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடத்துவதற்கான பட்ஜெட்டை ஐசிசி ஒதுக்கியது. இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு ஒருவேளை இந்தியா வரவில்லை என்றால் வெளிநாடு சென்று விளையாடுவதற்காக கூடுதலாக 60 கோடி ரூபாய் நிதி ஐசிசியால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்று பல்வேறு வீரர்களும் வலியுறுத்திய நிலையில் ஹர்பஜன் சிங் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இது அவர்களுடைய சொந்த கருத்து. அதில் எந்த தவறும் இல்லை.

அதே சமயம் நாங்கள் என்ன சொல்கிறோமோ அது எங்களுடைய கருத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் எப்போதுமே பாதுகாப்பு பிரச்சனை இருக்கின்றது. பாகிஸ்தானில் வீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்றால் இந்திய அணி அங்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
அதேசமயம் பாகிஸ்தான் நமது வீரர்களுக்கு முழு பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்தால் அதன் பிறகு பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியாவுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இது குறித்து முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசு மட்டும் தான். இது கிரிக்கெட்டுக்கான விவகாரம் மட்டும் கிடையாது.
இது கிரிக்கெட்டையும் தாண்டி செல்கிறது. ஒரு கிரிக்கெட் வீரராக நான் எங்கு வேண்டுமானாலும் சென்று கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவேன். ஆனால் எனக்கு முதலில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது. பாதுகாப்பு இல்லாத இடத்திற்கு நிச்சயம் எந்த ஒரு வீரரும் செல்லக்கூடாது என்று ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானுக்கு 2008 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறது. பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பு அம்சம் அதிகரித்து இருக்கிறது. இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது.
மேலும் அண்மையில் ஆசியக் கோப்பை நடைபெற்ற போது கூட இந்திய அணி அங்கு வர மறுத்துவிட்டது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடருக்கு பிறகு பிறகு பாகிஸ்தானில் எந்த ஒரு ஐசிசி தொடரும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.