டெல்லி: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா நமீபியாவுக்கு எதிரான தனது இரண்டாவது லீக் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நமீபியா கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை என்றாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடினர். வெறும் 6.5 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த அணி என்ற சாதனையை படைத்தனர்.

இதற்கு முன்னதாக, 2014-ல் அயர்லாந்திற்கு எதிராக நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், வெறும் 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார். தனது ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசிய அவர், வெறும் 20 பந்துகளில் அரைசதம் எட்டி, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்களில் ஒருவரானார்.
திலக் வர்மாவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால், முதல் ஆறு ஓவர்களில் பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் என்ற புதிய சாதனையும் பதிவானது.
இஷான் ஆட்டமிழந்த பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணிக்கு ஹர்திக் பாண்டியா ஒரு சிறப்பான அரைசதம் அடித்து, 209 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 8 முறை வென்றுள்ளது.