லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டன. இது மாபெரும் சாதனையாக மாறி இருக்கிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்திய அணி சார்பில் முதன்முறையாக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது. அப்போது இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 101 ரன்களும், சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்து இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்தனர். ரிஷப் பண்ட் இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார். அவர் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் சதம் அடித்து தொடர்ந்து ரன் சேர்த்தார். இதை அடுத்து, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதன்முறையாக ஒரே போட்டியில் ஐந்து சதங்களைப் பதிவு செய்து அசத்தியது.
இதுவரை உலக அளவில் ஆறு அணிகள் மட்டுமே இந்தச் சாதனையை செய்துள்ளன. ஏழாவதாக இந்திய அணி இந்தச் சாதனையை செய்துள்ளது. அதிலும் வெளிநாட்டு மண்ணில் ஐந்து சதங்களை அடித்த ஒரே அணியாக இதுவரை ஆஸ்திரேலியா மட்டுமே இருந்தது. 1955ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன.
அதன் பிறகு எந்த அணியும் வெளிநாட்டு மண்ணில் 5 சதங்களை அடிக்கவில்லை. தற்போது இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் ஐந்து சதங்களை அடித்து ஆஸ்திரேலியாவின் அந்தச் சாதனையை மீண்டும் நிகழ்த்தி இருக்கிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனை மீண்டும் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். இதுவரை ஆறு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை படைத்திருந்தனர். அந்தப் பட்டியலில் ஏழாவதாக ரிஷப் பண்ட் சேர்ந்து இருக்கிறார்.
விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இருக்கின்றனர். இவர்களில் இங்கிலாந்து மண்ணில் இந்தச் சாதனையை செய்த முதல் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.