சண்டிகர்: முதலில் நாம் நன்றாக விளையாட வேண்டும். அப்போதுதான் முதலிடம் தானாக தேடி வரும் என்று எதார்த்தமாக கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணி.இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை மொஹாலி மைதானத்தில் தொடங்கியது. போட்டிக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த டோணி பேசுகையில், மொஹாலி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. இங்கு பந்து நன்கு எகிறுகிறது. இந்த மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்த போது சிறப்பாக ஆடினோம். இது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இந்த தொடரை கைப்பற்றுவோம். கேப்டன் என்ற முறையில் சில வியூகங்களை வகுத்து முடிவுகளை எடுக்கும் உரிமை என்னிடம் உள்ளது. ஆனால் தொடரின் வெற்றி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பொறுத்தே அமையும். ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது சற்று கடினமானதுதான். அவர்கள் கடும் நெருக்கடியை அளிப்பார்கள்.ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த சில வருடங்களாக நல்ல முறையிலேயே விளையாடி வருகிறோம். தர வரிசையில் முதல் இடம் பெறுவது முக்கியமில்லை. நல்ல முறையில் பயிற்சி எடுத்து சிறப்பான உத்திகளை கையாள்வதே முக்கியம். நாம் நன்றாக விளையாடினால் நிச்சயம் தர வரிசையில் முதலிடம் நம்மைத் தேடி தானாகவே வரும் என்றார் டோணி.