மும்பை : இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் களமிறங்கினார். இதில் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவியது.
இது தலைமை பயிற்சியாளரான கம்பிருக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கம்பீரின் அறிவுறுத்தலின்படி நெதர்லாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரியான் டென்டோசெட் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை அணி எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் 27 விக்கெட்டுகளை சுழற் பந்துவீச்சாளர்கள் தான் கைப்பற்றினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரியான் டென் டோசெட் இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுவார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் இந்திய ரசிகர்களிடம் இருக்கின்றது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வது என்பது இந்திய அணியின் பலம் தானே என்று நாம் எண்ணி விட்டோம்.
ஆனால் தற்போது அதிலும் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுழற் பந்து வீச்சையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த இருக்கின்றேன். இதன் மூலம் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதில் உலகின் சிறந்த வீரர்கள் இந்தியர்கள் தான் என்ற பெயர் மீண்டும் பெற விரும்புகிறேன்.
இதற்காக பெரிய அளவில் யுக்திகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது மனநிலை மற்றும் கள சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடினாலே உங்களால் சுழற் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ள முடியும். தற்போது பயிற்சியாளர் குழுவில் இருக்கும் எங்களுக்கு பல சவால்கள் அடுத்தடுத்து காத்திருக்கிறது.
எங்களுடைய முதல் சவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைக்க வேண்டும். இன்னும் பத்து டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் 5 போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
அதன் பிறகு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்பு நாங்கள் வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட போகிறோம். அது நிச்சயம் பெரிய சவால்களை கொடுக்கும். டெஸ்ட் போட்டிக்கும் ஒருநாள் போட்டிக்கும் மாறி மாறி வீரர்கள் விளையாடுவது ஒரு சவால் தான் மூன்றாவது சவாலாக 2026 t20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த தொடருக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றது. ஒரு பயிற்சியாளராக அந்த தொடரை நான் மீண்டும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என்று ரியான் டென்தோசெட் கூறியுள்ளார்.