இந்திய அணியின் 2 பயிற்சியாளர்கள் பதவி காலி.. இங்கிலாந்து தொடர் தோல்வியை அடுத்து பிசிசிஐ அதிரடி
மும்பை: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப்பின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரையான் டென் டோஸ்காட்டேவை தொடர்ந்து திலீப்பும் தனது ஒப்பந்தத்தை இழக்கிறார்.
அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்தப் பொறுப்பினை ஏற்பதற்கு, சில பயிற்சியாளர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒட்டுமொத்த போட்டிகளில் 6க்கு0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, டென் டோஸ்காட்டே மற்றும் திலீப் ஆகிய இருவரின் ஒப்பந்தங்களும் முடிவடைந்தன. தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கமானவரான டென் டோஸ்காட்டேவுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும், அவர் அதனை மறுத்துவிட்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் கேகேஆர் அணியில் இணைய முடிவு செய்துள்ளார்.
டென் டோஸ்காட்டே மற்றும் திலீப் ஆகியோர் இடையே இந்திய அணியில் ஒரு அசாதாரண பணிச்சூழல் நிலவியது. கம்பீர், அபிஷேக் நாயர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோருடன் கேகேஆர் அணியில் பணிபுரிந்ததன் அடிப்படையில் டென் டோஸ்காட்டே இந்திய அணியின் பயிற்சிப் பிரிவில் இணைந்தார். ஆனால், அப்போது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஏற்கனவே திலீப் செயல்பட்டு வந்தார்.
இதனால், டென் டோஸ்காட்டே பெரும்பாலும் ஊடகங்களைச் சந்தித்து கம்பீரின் தரப்பு விளக்கங்களை அளிக்கும் முகமாக செயல்பட்டதோடு, அணியின் பொதுவான பயிற்சி ஆலோசனைகளிலும் பங்கேற்று வந்தார்.திலீப்புக்குப் பிறகு டென் டோஸ்காட்டே இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த மாற்றம் இறுதிவரை நடைமுறைக்கு வரவில்லை.
இதற்கிடையில், டென் டோஸ்காட்டே கேகேஆர் அணிக்குத் திரும்புவது அவருக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். அவர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கேகேஆர் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியில் வீரராக விளையாடியவர். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு அவர்கள் கோப்பையை வென்றபோதும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
இப்போது கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் நாயருடன் அவர் மீண்டும் அங்கு இணையவுள்ளார். திலீப்பின் அடுத்தகட்ட பணி குறித்து இன்னும் தெளிவான விபரங்கள் இல்லை. ஆனால், 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கும் சற்றே கூடுதல் காலம் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணிக்கு ஒரு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் அவசரமாகத் தேவைப்படுகிறது. புதிய பயிற்சி நிர்வாகத்தின் கீழ் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அண்மையில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற தொடர்கள் அனைத்திலும் இந்திய அணியின் ஃபீல்டிங் செயல்பாடு மிகவும் பலவீனமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

