மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இந்த பிரதிபலனும் பார்க்காத ஒப்பற்ற சேவகன் என்றால் அது ராகுல் டிராவிட் தான். அணிக்கு எது தேவையோ அதை செய்வதில் கொஞ்சம் கூட சுயநலம் பார்க்க மாட்டார். அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லையா சரி நான் அதை செய்கின்றேன்.
அணியில் பினிஸர் இல்லையா சரி அதை நான் மேற்கொள்கின்றேன். இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லையா அந்தப் பணியையும் நான் செய்கின்றேன். பவுலர் இல்லையா ஓவர் கொடுங்கள் வீசுகின்றேன்.

அணியை வழிநடத்த வேண்டுமா கொடுங்கள் அந்த பொறுப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என எது கேட்டாலும் அலாவுதீன் அற்புத விளக்கு புதம் போல் டிராவிட் இந்திய அணிக்காக பல்வேறு சேவைகளை செய்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட டிராவிட் வெஸ்ட் இண்டீஸ் இல் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே முதல் சுற்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால் தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.
அப்போது இந்திய அணியின் கேப்டனாக டிராவிட் இருந்ததால், அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ராகுல் டிராவிட் ஆளானார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு ராகுல் டிராவிட் கவனம் செலுத்தாமல் இருந்தார். தன்னுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் அளவுக்கு இந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இருந்தது.
அதன் பிறகு 17 ஆண்டு கழித்து அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இன்று பயிற்சியாளராக உலக கோப்பையை டிராவிட் வென்றிருக்கிறார். இந்த இடைப்பட்ட ஆண்டில் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் , இந்திய அண்டர் 19 பயிற்சியாளர் இந்திய ஏ அணி பயிற்சியாளர் தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
ஆனால், அப்போதும் உலகக்கோப்பை என்ற கனவை தொட முடியாமல் இருந்ததால் 2023 ஆம் ஆண்டு இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியில் வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு கடைசி வாய்ப்பாக 2024 டி20 உலக கோப்பை மட்டுமே இருந்தது. தொலைந்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கின்றது.
அதை போல் ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை இதே மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தான் தொலைந்தது. தற்போது டிராவிட் பல்வேறு அனுபவங்கள், பயிற்சிகள், திட்டமிடுதல், தியாகங்கள் உழைப்பு என 17 ஆண்டுகளாக தன்னையே மெருகேற்றி மீண்டும் தொலைந்த இடத்திலேயே தன்னுடைய மரியாதையை மீட்டெடுத்து இன்று சாதனை படைத்திருக்கிறார்.