மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவு அடைந்த நிலையில் இந்திய அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ இருக்கின்றது. ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் ராகுல் டிராவிட் விலகி விட்டார். இந்த சூழலில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கம்பீர் தலைமையில் இந்திய அணி தற்போது பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் மற்றும் ஐசிசி போட்டிகளில் விளையாட இருக்கின்றது.

குறிப்பாக 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ,ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என இரண்டு முக்கிய தொடர்கள் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்லி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கம்பீர் எப்போதுமே சிறப்பான பணியை செய்வார். அவருக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணியில் அவர் ஆற்றிய பணிகளை சொல்லலாம்.
எப்போதுமே அணிக்காகவும் வீரர்களுக்காகவும் கம்பீர் இருப்பார். வீரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் கம்பீர் ஒரு வழியை கண்டுபிடிப்பார். அணியை ஒருங்கிணைந்து விளையாட வைப்பதில் கம்பீர் வல்லவர். மேலும் ஒவ்வொரு அணிக்கும் அடித்தளம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை கம்பீர் உறுதியாக இருப்பார். கம்பீர் இந்திய அணிக்காக விளையாடும் போது பிரமாதமான ஒரு வீரராக இருந்தார்.
அவருடைய ஆக்ரோஷமும், வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் நிச்சயம் இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும். சர்வதேச வீரராக ஜொலித்த கம்பீர் தற்போது பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்படுவார். இதனால் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருப்பதால் இந்திய அணி ஒரு சிறந்த நபரின் கைகளில் தான் இருக்கின்றது என்று பிரட்லீ பாராட்டு தெரிவித்தார்.