மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி எப்போதுமே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒன்றுடன் கலந்தே இருக்கும். 90ஸ் கிட்ஸ்களுக்கு சஹாரா என போடப்பட்டிருக்கும் ஜெர்சி தான் மிகப்பெரிய ஃபேவரிட்.
அதன் பிறகு எவ்வளவோ ஜெர்சி வந்தாலும் ரசிகர்கள் மனதை அது ஈர்க்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் ஸ்பான்சர் செய்யும் உரிமையை அடிடாஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

2028ஆம் ஆண்டு வரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடிடாஸ் நிறுவனத்தின் ஜெர்சியையே இந்திய அணி அணிய உள்ளது. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 250 கோடி ரூபாயை அடிடாஸ் நிறுவனம் பிசிசிஐக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அடிடாஸ் நிறுவனம் 75 லட்சம் ரூபாய் பி சி சி ஐ க்கு வழங்கும்.
இந்த நிலையில் வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தங்களது புதிய ஜெர்சியை அணிய இருக்கிறார்கள். மேலும் இந்திய அணி பயிற்சி செய்யும் போது அணிந்து கொள்ளும் ஜெர்சியையும் அடிடாஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது. ஸ்கை ப்ளூ கலரில் இருக்கும் இந்த ஜெர்சியில் அடிடாஸ் லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீல கலர் ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் வீடியோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அணியின் ஜெர்சி பார்ப்பதற்கு கூலாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணியின் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 ஜெர்சியையும் அடிடாஸ் மற்றும் பிசிசிஐ உடனே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்த ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோன்று அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐயும் கை கோர்த்துள்ளதால் நடப்பாண்டில் நடைபெறும் இரண்டு உலகக் கோப்பையும் இந்தியா வெல்ல வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.