மும்பை : விராட் கோலி கேப்டன் பதவியை பறிக்கும் போது மட்டும் ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணிகளுக்கு ஒரே கேப்டன் தான் இருக்க முடியும் எனக் கூறிய பிசிசிஐ அதிகாரிகள், இப்போது மட்டும் மூன்று அணிகளுக்கு மூன்று கேப்டன்களை நியமித்து இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பெரிய கிரிக்கெட் அணிகள் மூன்று அணிகளுக்கும் இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை நியமிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளன. இப்படி ஒவ்வொரு அணிக்கும் தனித் தனி கேப்டன்களை நியமிப்பதை "ஸ்பிலிட் கேப்டன்சி" என கூறுவார்கள்.

இந்திய அணியில் இந்த வழக்கம் இல்லை. ஆனால், அணியின் கேப்டன் சில தொடர்களில், போட்டிகளில் ஓய்வு பெற்றால் மட்டும் அப்போது வேறு கேப்டன் நியமிக்கப்படும் நடைமுறை உள்ளது. 2021 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு பிசிசிஐ அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. அப்போது பலரும் டெஸ்ட் அணிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக நீடிக்கலாம், ஒருநாள் அணிக்கும், டி20 அணிக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என கூறிய போது பிசிசிஐ அதை மறுத்தது.
இந்திய அணியில் ஸ்பிலிட் கேப்டன்சி முறை சரி வராது. ரோஹித் சர்மாவே மூன்று அணிக்கும் கேப்டனாக இருப்பார் என கூறியது. ஆனால், தற்போது 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் பெரிய அளவில் இந்திய அணியில் குழப்பம் ஏற்பட்டு தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் அணிக்கு கே எல் ராகுல், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரோஹித் சர்மா ஓய்வு பெற விரும்பியதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலி ரசிகர்கள் இது குறித்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். அன்று விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கலாம் என பலரும் கூறிய போது ஸ்பிலிட் கேப்டன்சி ஒத்து வராது எனக் கூறிய பிசிசிஐ, இப்போது மட்டும் ஏன் மூன்று அணிகளுக்கும் மூன்று கேப்டன்களை நியமிக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளனர்.