மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி ஒரு மாதம் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை வென்று சாதித்த இந்திய அணி அதன் பின் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வென்று அசத்தியிருக்கிறது.
தற்போது இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம். எந்தவித இடைவேளையும் இன்றி இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இதில் முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இது இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். அக்டோபர் 23ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 25ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும். இதனை தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
இதில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் முடிவடைந்த உடனே இந்திய அணி தென்னாப்பிரிக்கா தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இந்த போட்டிகள் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது முடிவடைந்த உடன் இந்திய அணி வீரர்களுக்கு சுமார் 20 நாட்கள் ஓய்வு கிடைக்கின்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடர் முடிவடைந்த உடன் பிப்ரவரி மாதம் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இது முடிவடைந்த உடன் ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த ஜூன் மாதம் வரை தொடர்ந்து போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.