மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் மாதம் தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் கனவில் கூட நிகழாத காரியமாக ஒரு காலத்தில் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால் இந்திய அணி தற்போது தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது.

இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியும் தற்போது பலமான அணியாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை அந்த அணி வென்றது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் கணித்திருக்கிறார்.
அது குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி, சிராஜ் ஆகிய மூன்று வீரர்களும் தொடர் முழுவதும் நல்ல உடல் தகுதியுடன் இருந்து விளையாடினால் நிச்சயமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங், டெஸ்ட் அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.
மேலும் ஐபிஎல் தொடரில் கலக்கிய மாயங் யாதவ் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று வசீம் ஜாஃபர் கூறியிருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறாத இந்திய அணி வீரர்கள் அனைவரும் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக முடியும் என அவர் கூறியுள்ளார்.