திருப்பதி : ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் தான் நிதிஷ்குமார் ரெட்டி. வெறும் 21 வயதான நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக 5 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டி பங்கேற்றார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் குவித்தார். இதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதேபோன்று இந்த தொடரில் பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் தனது வாழ்க்கையே மாறிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிதிஷ்குமார் ரெட்டி முட்டி போட்டு படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து கொண்ட நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமது இந்த நிலைக்கு கடவுளின் ஆசிர்வாதம் தான் காரணம் என கூறி நிதிஷ்குமார் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடினமான முறையில் தன்னுடைய நேர்த்திக் கடனை செலுத்தினார். கிரிக்கெட் வீரர் ஒருவர் கடின நேர்த்திக்கடனை செலுத்தியதை பார்த்து அங்கிருந்து ரசிகர்கள் கோவிந்தா! கோவிந்தா என்று முழக்கமிட்டனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதீஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பார்க்க அலாரம் வைத்து எழுந்த நான் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் முதல் தொடரை விளையாடி இருக்கின்றேன்.கடந்த இரண்டு மாதம் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
ஒரு வீரராகவும் ஒரு மனிதனாகவும் முன்னேற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் இந்த தொடரை நினைத்த மாதிரி முடிக்கவில்லை. எனினும் நாங்கள் மீண்டும் பலமான ஒரு அணியாக திரும்புவோம் என்று நிதீஷ்குமார் கூறியுள்ளார். நிதிஷ்குமார் ஆட்டத்தின் மூலம் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.