ஜாம்நகர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். ஜடேஜா இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அவருடைய மனைவி ரிவாபாவை கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜக.
இந்த நிலையில் தான் பெரிய கிரிக்கெட் வீரரின் மனைவி என்பதால் ரிவாபா எப்போதும் தன்னிச்சையாகவும் திமிராகவும் நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு இருந்தது.

கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளை அவர் மதிப்பதில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதற்கான ஆதாரமாக தற்போது நடந்த சண்டை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தான் ரிவாபா எம்எல்ஏ ஆகவே வெற்றி பெற்றார். ஆனால் அந்த கட்சியில் இரண்டு முறை எம்பி ஆக இருந்த பூனாம்பன் மற்றும் ஜாம்நகர் மேயர் பீனாபேன் கோத்தாரி ஆகியோரிடம் ரிவாபா மோதலில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அனைவரும் பங்கேற்ற நிலையில் ரிவாபா கோபமாக தன்னைவிட கட்சியில் பெரிய சீனியரான பூனாம்பேன்னை திட்டினார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ரிவாபா தொடர்ந்து கடுப்பாகி ஏதோ ஹிந்தியில் திட்டிக் கொண்டிருந்தார்.
இறுதியில் கோபத்தில் ஒரு வார்த்தையை பயன்படுத்த அங்கிருந்தவர் ரிவாபாவை கடுமையாக எதிர்த்தனர். அப்போது ரிவாபா உங்களுடைய நிலையை தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்று கோபமாக கூறினார். பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலரும் அங்கு இருந்த நிலையில் ரிவாபா தாம் ஜூனியர் என்பதை மறந்து விட்டு மூத்த கட்சி நிர்வாகிகளை திட்டியது அங்கு இருந்தவர்களின் முகத்தை சுளிக்க வைத்தது.
கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி என்ற ஒரே அந்தஸ்தால் மட்டும் ரிவாபா தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார். இதனால் ரிவாபாவின் இந்த பேச்சுக்கு அவர் பாஜக கட்சி மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சியின் மேல் இடத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிவாபாவின் அரசியல் பயணம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.