மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்களில் வெற்றி வாகை சூடியது இந்தியா. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், விசாகபட்டினம் மற்றும் மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது. 4வது டெஸ்ட் போட்டி, கடந்த 8ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களும், இந்தியா, 631 ரன்களும் குவிந்தன.
231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 182 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி, 231 ரன்களை கடந்து, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முனைப்பிலிருந்தது. ஆனால், 195 ரன்களில் அந்த அணி ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் அஸ்வின் மீண்டும் கலக்கலாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர்குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சிலும் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை கட்டுப்படுத்தியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா 3-0 என்ற கணக்கில் பேடிஎம் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, சென்னையில் டிசம்ப்ர 16ம் தேதி தொடங்க உள்ளது.