கான்பூர்: கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தனது 500வது டெஸ்ட் போட்டியை சிறப்பான முறையில் வென்று விட்டது இந்தியா.
இந்தியாவின் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களைச் சாய்த்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்தியா 318 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முரளி விஜய், பூஜாரா ஆகியோர் அரை சதம் போட்டனர். கடைசி வரிசையில் அஸ்வின் 40, ரவீந்திர ஜடேஜா 42 ரன்களைக் குவித்தனர்.
இதையடுத்து நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சால் 262 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டியது. நியூசிலாந்து தரப்பில் லாத்தம் 58, கனே வில்லியம்சன் 75, ராஞ்சி 38, சான்ட்னர் 32 என எடுத்தனர்.

அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்தியா. முரளி விஜய் 76, புஜாரா 78 ரன்களைக் குவித்தனர். ரஹானே 40 ரன்கள் எடுக்க, ரோஹித் சர்மா 68 ரன்களைக் குவித்தார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார்.
அதன் பின்னர் ஆட வந்த நியூசிலாந்து தனது 2வது இன்னிங்ஸை 236 ரன்களுக்கு இழந்ததால் 197 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. ராஞ்சி கடுமையாகப் போராடி 80 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 71 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொதப்பினர்.

இந்தியாவின் ஆர். அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களைச் சாய்த்தார். முகம்மது சமி 2 விக்கெட் எடுத்தார்.